

புதுவையில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் வரும் 4ந் தேதி திறக்கப்படுகிறது.
இதையொட்டி போக்குவரத்து துறை சார்பில் பள்ளி, கல்லுாரி, கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் 2 நாட்கள் நடந்தது. மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்துமிடத்தில் நடந்த ஆய்வை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து ஆணையர் அமன்சர்மா தலைமையில் செயற்பொறியாளர் சீத்தாராமராஜூ, போக்குவரத்து ஆய்வாளர்கள், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புதுவையில் மொத்தம் ஆயிரத்து 60 கல்வி நிறுவன வாகனங்கள் உள்ளன.
ஆனால், 2 நாட்கள் நடந்த ஆய்வில் 227 வாகனங்கள் மட்டுமே பங்கேற்றன. இதில் தகுதியான 190 வாகனங்களுக்கு அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. குறைபாடுகளுடன் இருந்த 37 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. 833 வாகனங்கள் ஆய்வில் பங்கேற்கவில்லை.
சிறப்பு முகாம் வராத வாகனங்கள் நேரடியாக போக்குவரத்து துறை அலுவலக நாட்களில் வந்து அனுமதி பெற வேண்டும். ஆய்வுக்கு வராத வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வுக்கு வராத வாகனங்கள், அனுமதி பெறாத வாகனங்களை இயக்க போக்குவரத்து துறை தடை விதிக்க வேண்டும். குழந்தைகளின் உயிர் விஷயத்தில் கல்வி நிறுவனங்கள் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.