

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்து வருகின்றனர்.
ஆனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடுமையான வெயிலால் அறைக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மாலையில் கடற்கரை சாலையில் அதிகளவில் கூடுகின்றனர்.
இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே கூடினர். சூரியன் உதிக்கும் அழகை கண்டுரசித்தனர். தொடர்ந்து கடலில் சிலர் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் குளித்தனர். புதுவை கடல் ஆபத்தானது, குளிக்க வேண்டாம் என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
இதையடுத்து காலையில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரித்து வெளியேற்றினர்.