Petrol, Diesel, Gas போதிய அளவு கையிருப்பில் உள்ளது: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு அறிவிப்பு

பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும்.உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
Petrol, Diesel, Gas போதிய அளவு கையிருப்பில் உள்ளது: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்கள் வழங்கலில் எந்தவித தடையும் ஏற்படாது. அனைத்து நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு உறுதி அளித்துள்ளன.

புதுச்சேரியில் எரிபொருள், சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது என சில சமூக ஊடகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த தகவல்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.

பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

எரிபொருள் மற்றும் சிலிண்டர் விநியோக நிலையை தொடர்ந்து கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் எண்ணெய் நிறுவனங்களுடனும் விநியோக முகவர்களுடனும் ஒருங்கிணைந்து, புதுச்சேரி முழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கியாஸ், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது.

பொதுமக்கள் வழக்கமான முறையில் எரிபொருளை பெறலாம். கியாஸ் சிலிண்டர்கள் வீட்டு உபயோக நுகர்வோருக்கே வழங்கிட வேண்டும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அவசர கொள்முதல் செய்யாமல் அமைதியாக இருக்கவும், தேவையான அளவில் மட்டுமே வாங்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர். புதுச்சேரி அரசு அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற இருப்பை உறுதி செய்ய முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com