தண்டவாளத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த ரவுடி- புதுச்சேரி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

சிதறி கிடந்த பேப்பர், கண்ணாடி துண்டுகள், ஆணிகள் மற்றும் சிறு சிறு கற்களை சேகரித்தனர்.தண்டவாளத்தில் வெடிகுண்டு வீச காரணம் என்ன? ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பரத்.
பரத்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று நள்ளிரவு 'டமார்' என்ற சத்தத்துடன் பயங்கரமாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான புகை மண்டலமாக இருந்தது. இது குறித்து ஒதியஞ்சாலைபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங் உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலைபோலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பேப்பர், கண்ணாடி துண்டுகள், ஆணிகள் மற்றும் சிறு சிறு கற்களை சேகரித்தனர்.

விசாரணையில், அரியாங்குப்பம் மணவெளி பெரியார் நகரை சேர்ந்த ரவுடி பரத் (வயது 19) என்பவர் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

தற்போது பரத் கவிக்குயில் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய வெடி மருந்து மற்றும் மூலபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பரத்தை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தண்டவாளத்தில் வெடிகுண்டு வீச காரணம் என்ன? ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பரத்துக்கும், வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அப்போது தனுஷ் அவரிடம் இனிமேல் வாணரப்பேட்டைபகுதிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

எனவே தனுசை மிரட்டும் நோக்கில், தானாகவே வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தே வெடி குண்டு தயாரித்ததும், மேலும் தான் தயாரித்த வெடிகுண்டு சரியாக வெடிக்கிறதா? என்பதை அறியும் வகையில் தண்டவாளத்தில் வீசி சோதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பரத் மீது ஏற்கனவே ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை போலீஸ் நிலையங்களில் 2 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com