சாலையை அளந்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ.- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
சாலையை அளந்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ.- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
Published on

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.

அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com