அரசியல் சாசனத்தை ப.ஜனதா, ஆர்.எஸ்.எஸ் சிதைத்து வருகிறது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் இந்தியாவிற்கே தவறான எடுத்து காட்டாக அமைந்துவிடும்.ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தை ப.ஜனதா, ஆர்.எஸ்.எஸ் சிதைத்து வருகிறது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
Published on

புதுச்சேரி:

எஸ்.ராமச்சந்திரனின் புதுவை செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன் என்ற நூல் வெளியீட்டு விழா புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவிற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுவை துணைத்தலைவர் லீலாவதி, இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் பெற்றனர்.

விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜனதா இன்றைக்கு சோதனைகூடமாக புதுவையை மாற்றி வருகிறது. பா.ஜனதா ஆட்சி நடத்தும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலேயே மின்துறையை தனியார் மயமாக்கும் வேலையை மக்கள் போராட்டங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது.

ஆனால் புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் இந்தியாவிற்கே தவறான எடுத்து காட்டாக அமைந்துவிடும்.எனவே அனைத்து பகுதி மக்களையும் பாதிக்ககூடிய மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இன்றைக்கு அரசியல் சாசனத்தை மீறும் வேலையாக பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கேள்விகுறியாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பாதுகாத்த அரசியல் சாசனத்தை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் சிதைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் தமிழ்நாட்டு கவர்னரின் சட்டமன்ற நடவடிக்கை அமைந்தது.

அதேபோல் நடைபெற்று முடிந்த இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தலிலும்,டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பா.ஜனதாதூக்கி வீசப்பட்டுள்ளது. எனவே தான் பா.ஜனதா தோற்கடிக்கபடக்கூடிய கட்சி தான் என்பதால் வரக்கூடிய தேர்தலில் அதற்கான பணியில் நாம் முழு வீச்சாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com