

புதுச்சேரி:
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை நரிகுறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது இளையமகள் காவ்யா (வயது 10). இவர் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவ்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காவ்யா தங்களது வீட்டுக்குள் புகுந்து பணம் திருடி சென்று விட்டதாக காவ்யாவின் தாய் ரேகாவிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யாவை அவரது தாய் ரேகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இன்று காலை வீட்டில் காவ்யா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தூக்கில் இருந்து காவ்யாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.