

மத்திய மீன்வள அமைச்சகம் கடலோர மாநிலங்களில் மீன்பிடி தடை காலத்துக்குள் பதிவு பெற்ற, பதிவு பெறாத மீன்பிடி படகுகளை கள ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம், உப்பளம் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் நல சங்ககங்களின் ஒத்துழைப்புடன் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது.
மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். புதுவை மீன்வளத்துறை துணை இயக்குனர் பக்கிரிசாமி தலைமையில் உதவிஆய்வாளர்கள் தலைமையில் 8 குழுக்களாக மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
படகில் பதிவு எண் தெளிவாக உள்ளதா? அசல் ஆவணங்கள், எந்திர விபரங்கள், படகின் நீள அளவுகள் உட்பட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. படகு உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிம சான்றிதழ், மானிய டீசல் புத்தகம், காப்பீடு ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
விடுபட்ட ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கள ஆய்வில் கணக்கில் வராத படகுகள் பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.