புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது. பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது, கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அதன்பின் புதிய பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனாளிகளை கண்டறிந்து மீண்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.

17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com