

புதுவை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட லோக்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது வாக்கை புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றியுள்ளார். புதுவையில் இன்று வாக்குப்பதிவையொட்டி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கவர்னர் தனது தாயார் லீனா, மனைவி பீனா ஆகியோருடன் வந்து வாக்களித்தார். கவர்னரின் தாயார் லீனா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின் கவர்னர் கைலாஷ்நாதன் கூறும்போது, ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நம் அனைவரின் கடமை என கூறினார்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதிக்கு உட்பட்ட திலாசுப்பேட்டை பிள்ளையார்கோவில் வீதியில் வசித்து வருகிறார். அவர் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து யமாகா பைக்கில் வந்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் சென்று, திருக்கனுார் அரசு பள்ளியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் மடுகரை அரசு நடுநிலைப்பள்ளியிலும், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ரெயில்நிலையம் எதிரே உள்ள குபேர் திருமண மண்டபத்திலும், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரெட்டியார்பாளையம் இமாகுலேட் பள்ளியிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.