

புதுச்சேரி:
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரெயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் வருகிற ஜூலை 1-ந் தேதி கொச்சுவேலியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.
இந்த பயணம் ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டும்.
11 பகல், 12 இரவுகள் ஸ்லீப்பர் வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.23 ஆயிரத்து 350, ஏ.சி. வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரத்து 350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சார்தாம் யாத்திரைக்கு வருகிற 28-ந் தேதி சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு ரெயில் பயணம் செல்கிறது.
13 நாட்கள் பயணத்துக்கு ரூ.61 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காசி, கயா சிறப்பு யாத்திரைக்கு வருகிற 16-ந் தேதி திருச்சியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கயா, காசி, அலகாபாசத் அயோத்தியா செல்கிறது.
7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை இணையதளத்தில் பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.