என் மலர்
புதுச்சேரி

ஹரிதிக் ஜா
கவர்னர் மாளிகைக்குள் புகுந்த வடமாநில மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
- கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
- அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாரதி பூங்கா அருகே செயின்ட் மார்ட்டின் வீதியில் கவர்னர் மாளிகை உள்ளது.
பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட 250 ஆண்டு பழமையான இந்த மாளிகை சேதமடைந்தது. இதனால் கவர்னர் மாளிகை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் குருசுகுப்பம் பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலாச்சார மைய கட்டிடத்துக்கு கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் இங்கு தங்கியுள்ளார். ஆனால் அலுவலக பணிகளை பழைய கட்டிடத்தில் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவர்னர் இல்லத்தில் புகுந்து, விருந்தினர் அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கவர்னர் மாளிகை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த வாலிபரை கவர்னர் மாளிகை போலீசார் பிடித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உட்பட உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரிதிக் ஜா என்பதும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரியவந்தது. இவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டலில் மது குடித்துள்ளார். அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த விருந்தினர் அறையில் படுத்து தூங்கியது தெரியவந்தது.
மாணவர் ஹரிதிக் ஜா மீது அத்து மீறி நுழைதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கூறிய தகவல் உண்மையா? என்பது குறித்தும் பெங்களூருவில் உள்ள கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு மாணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






