பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா?-அன்பழகன் பேட்டி

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.

நாராயணசாமி தலைமையிலான அரசு புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி காலமாகும். தேர்தலில் போட்டியிடாமல் பதுங்கிக் கொண்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும், பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் பொய்யான பல கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் தகுதியற்ற செயலாகும்.

பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை நாராயணசாமி கேட்கின்றார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நலத்திட்ட உதவிகள் என்பது சுமார் ரூ 300 கோடி அளவில் தான் வரும். ரூ 300 கோடி என்பது மொத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் தான்,

மொத்த பட்ஜெட்டில் எப்பொழுதும் 100 சதவீதத்தை எந்த அரசாலும் செலவு செய்ய முடியாது. பல துறைகளில் 5 முதல் 10 சதவீதம் குறைவாக செலவு செய்யக்கூடிய பணத்தை திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டில் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும்.அப்படியே இல்லை என்றாலும் கலால் துறையில் சாதாரண வரி விதிப்பின் மூலம் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை பாராட்டு மனம் இல்லாமல் மக்களிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி சட்டமன்றத் தேர்தல் என ஒரு போர் வரும் போது முன்னின்று தளபதியாக சண்டை போட வேண்டியவர் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடி காங்கிரஸ் கட்சியை புதுவையில் காணாமல் செய்துவிட்டார்.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் மீது உண்மையில் அக்கறை இருக்குமேயானால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் நாராயணசாமி போட்டியிட தயாரா ? அப்படி அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. இவ்வாறு அன்பழகன் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார்,மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com