

புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு லட்சுமி காந்தன் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து வருவாய் கிராமத்திலும் ஸ்வமித்ரா திட்டத்தின் கீழ் சொத்து அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்குவது குறித்தும், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு கண்டறிந்து பட்டியல் தயாரிப்பது, அரசு துறையில் உள்ள காலியிடங்களை கணக்கிடுதல் பற்றி பேசப்பட்டது.
மேலும் ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காதது குறித்தும் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கூறுகையில் முதல் கட்டமாக அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு இடங்களை கண்டறிந்து முதல் கட்டமாக சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.