வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை- கோவிலுக்கு சென்ற 2 மணி நேரத்தில் துணிகர சம்பவம்

கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை- கோவிலுக்கு சென்ற 2 மணி நேரத்தில் துணிகர சம்பவம்
Published on

பாகூர்:

புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 41). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு தானம்பாளையம் பகுதியில் புதியமனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

இவரது சொந்த ஊரான நல்லவாடு பகுதியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வியாபாரம் முடிந்து தினமும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் திருவிழாவுக்கு சென்று வந்தார்.

அதுபோல் நேற்று கோவிலில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றதால் மாலை 6.00 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நல்லவாடு கோவிலுக்கு சென்றார்.

அங்கு சாமியை தரிசித்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுகிட்டார்.

2 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி புகார் செய்தார். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக் குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி தூவி விட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புதிய மனைப்பிரிவில் வீடு இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்

தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com