பாஜகவில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டம் - மாநில தலைமைகளுக்கும் மோடி உத்தரவு

பாஜகவில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டம் - மாநில தலைமைகளுக்கும் மோடி உத்தரவு
Published on

புதுடெல்லி:

2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் கட்சியை இன்னும் வளர்க்கும் வகையில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பாரதிய ஜனதாவின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தற்போது 11 கோடி உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவில் இருக்கிறார்கள்.

இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது.

ஆனாலும், கட்சியை இன்னும் வளர்க்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மீண்டும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. இதில் மாநில கட்சிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணத்தில் முடங்கி விடாமல் உறுப்பினர் சேர்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி இயக்கமாக இருந்த ஜனசங்கத்தின் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு நாள் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

இவர் காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநில பாரதிய ஜனதா தலைவர் நித்யானந்தராய், மராட்டிய மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, உத்தரபிரதேச தலைவர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் மத்திய மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த 3 மாநிலங்களிலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஆனாலும், பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவி நீடிக்கப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு உடனடியாக நடக்குமா? என்று தெரிய வில்லை.

ஏனென்றால், மராட்டியம், ஜார்கண்ட், காஷ்மீர், அரியானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதிலும் பாரதிய ஜனதா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.

இதனால் அந்த தேர்தல் முடியும் வரை அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com