

பாட்னா:
பீகார் மாநில துணைமுதல்வராக இருந்த தேஜஷ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதையடுத்து அவர் பதவிவிலக வேண்டுமென முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் பதவிவிலகாததை அடுத்து முதல்வர் நிதிஷ்குமார் கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. அவருக்கு ஆதரவளித்ததை அடுத்து அவர் மீண்டும் ஜூலை 27-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இதற்கு மெகா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவர் ஆட்சி அமைக்க தடைகோரி பீகார் உயர்நீதிமன்றத்தில் ராஷ்த்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்களான சரோஜ் யாதவ் மற்றும் சந்தன் வர்மா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஜிதேந்தர் குமார் ஆகியோர் திமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தலைமையில் மெகா கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சி அமைப்பதற்கு தான் மக்கள் வாக்களித்ததாக கூறி இருந்தனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ்குமார் அமைத்துள்ள புதிய ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை பாட்னா உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இது நிதிஷ்குமாருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக கருதப்படுகிறது.