

பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த இருளிப்பாட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காகித தொழிற்சாலை உள்ளது.
இங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள மதுபான ஆலைகளுக்கு அட்டைப் பெட்டிகள் தயாரித்து அனுப்பப்படுகிறது.
இன்று காலை அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த காகித கழிவில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. காகித பண்டல்களும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
இதுகுறித்து பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 500 டன் காகித பண்டல்கள் எரிந்து சேதமானது.
தீவிபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews