

இஸ்லாமாபாத்:
ஏமன் நாட்டில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கின. இதன் காரணமாக ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
கடந்த மாதம் 14-ந் தேதி சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டின. கடந்த 11-ந் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த ஈரானுக்கு சொந்தமான ‘சபிதி’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்படிப்பட்ட தாக்குதல்களால் ஈரான், சவுதி அரேபியா இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இதில் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன் வந்துள்ளார். இதற்காக அவர் நேற்று ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார். அவருடன் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, பிரதமரின் சிறப்பு உதவியாளர் சயீத் ஜூல்பிகர் அப்பாஸ் புகாரியும் சென்றனர்.