

இஸ்லாமாபாத்:
பனாமா பேப்பர் தொடர்பான மோசடியில் சிக்கியதால் பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் நவாஸ் ஷெரீப். இதை எதிர்த்து அவர் பல்வேறு பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நிலுவையில் இருக்கும் இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் நேரில் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மேலும் இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே, நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் மரியம், உசேன், ஹாசன் மற்றும் அவரது மருமகன் மொகமது சப்தார் ஆகியோர் வரும் 19 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடமை முகமை, நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் மற்றும் பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தார் ஆகியோர் மீது நான்கு வழக்குகள் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.