ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் போலி புகைப்படத்தை காட்டி மூக்குடை பட்ட பாகிஸ்தான்

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோஹி நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக போலி புகைப்படத்தை காண்பித்து மூக்குடைபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் போலி புகைப்படத்தை காட்டி மூக்குடை பட்ட பாகிஸ்தான்
Published on

நியூயார்க்:

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியபோது, ‘ஐ.ஐ.டி.களை இந்தியா உருவாக்கும்போது, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான எல்.இ.டி.யை (லஷ்கர்-இ-தொய்பா) உருவாக்குகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோஹி நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஒரு புகைப்படத்தை காண்பித்து பேசினார். காஷ்மீரில் பெல்லட் குண்டு தாக்குதலால் சிதைந்த முகத்துடன் ஒரு இளம்பெண் காணப்படுவதாக அந்த புகைப்படம் பற்றி அவர் தெரிவித்தார். ‘இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்’ என்றும் ஆவேசமாக கூறினார்.

ஆனால், உண்மையில் அந்த படம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 2014-ம் ஆண்டு ஹெய்தி லெவின் என்ற விருது பெற்ற அமெரிக்க பத்திரிகையாளர் எடுத்த புகைப்படம் ஆகும். இஸ்ரேல் விமான தாக்குதலில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராயா அபு ஜோமா என்ற 17 வயது இளம்பெண்ணின் புகைப்படம்தான் அது. அந்த படம், பல்வேறு செய்தி இணையதளங்களில் காணப்படுகிறது.

இந்த உண்மை சுட்டிக்காட்டப்பட்டவுடன், பாகிஸ்தான் பிரதிநிதி மூக்குடைபட்டதுபோல் அமைதியாகி விட்டார். அவரது செயல் குறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com