

லக்னோ:
பாலிவுட் திரைப்படமான பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் அந்த படத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனர். குஜராத், அரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இதனால் வன்முறை வெடித்தது.
வன்முறைகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறிய நிலையில், இது தொடர்பான வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் மூன்று திரையரங்குகளில் பத்மாவத் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
நேற்று மாலை சந்திரா டாக்கீஸ் என்ற திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரை நோக்கி வீசியுள்ளனர். இதனால், பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை என தெரிவித்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.