

விருதுநகர்:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 30-ந் தேதி காவல் முடிந்து இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு இன்று மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் அளிப்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மீதான விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDevicase #Murugan #Karuppasamy