

சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நேரு பூங்காவில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையும் இயக்கப்படுகிறது.
நேரு பூங்கா, கோயம்பேடு பகுதிகளில் இருந்து விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூரில் இறங்கி வேறு ரெயிலில் ஏற வேண்டும்.
லக்கேஜுகளுடன் வரும் பயணிகள் இதனால் சிரமப்படுகிறார்கள். மேலும் அடுத்த ரெயிலுக்காக 10 நிமிடங்கள்வரை காத்து இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் ஆலந்தூரில் லூப்லைன் வசதி செய்யப்பட்டு கோயம்பேடு வழித்தடத்தில் இருந்து வரும் ரெயில்கள் விமான நிலையம் வரை இயக்கப்பட்டது. தொழில் நுட்ப ரீதியாக இதில் சிரமம் ஏற்பட்டதால் பின்னர் அந்த வசதியை நிறுத்திவிட்டனர்.
இப்போது மீண்டும் விமான நிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம்வரை 20 கிலோ மீட்டர் இதற்கான கட்டணம் ரூ.54.
கோயம்பேடு வழித்தடத்தில் இருந்து வரும் ரெயில்களில் சில ரெயில்களை விமான நிலையம் வரை இயக்கவும் மற்ற ரெயில்களை வழக்கம் போல் பரங்கிமலைவரை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இனி மெட்ரோ ரெயிலில் நேரு பூங்காவில் இருந்து விமான நிலையத்துக்கு 40 நிமிடங்களில் செல்ல முடியும்.