கரப்பான்பூச்சி கட்சித் தலைவருக்கு கன்னத்தில் பளார்!

தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி இன்று ராஜஸ்தானில் போராட்டம் நடைபெற்றது.
கரப்பான்பூச்சி கட்சித் தலைவருக்கு கன்னத்தில் பளார்!
Published on

இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்தின் ஒற்றை விமர்சனத்தால் உருவாகி, தற்போது நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு எதிராக பேசிவரும் முக்கிய அரசியல் நய்யாண்டி இயக்கம்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.

இக்கட்சி நீட்தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்தவரிசையில் இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உரையாற்ற வந்தநிலையில், அவரது ஆதரவாளர்கள் அவரைத் தங்களது தோள்களில் தூக்கி வந்தனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த சிலர், திடீரென அவரது கழுத்தில் இருந்த துணியை இழுத்து, அவரது கன்னத்தில் பலமுறை மாறி மாறி அறைந்து, கீழே இழுக்க முயன்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், ஆதரவாளர்களுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே,

“இவையெல்லாம் நம்மைப் பயமுறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், பிரச்சினையிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள். நாம் பிரச்சினையிலிருந்து சற்றும் திசை திரும்பக்கூடாது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை.” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com