

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் ஜோடுகுல பாலத்தை சேர்ந்தவர் சாந்த குமாரி. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் சாய் கிரண், ஜஸ்வந்த், மணி, லட்சுமி சவுன்யா, மஞ்சு. அனைவரும் அடிக்கடி மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் விசாலாட்சி நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்தனர். நள்ளிரவு வரை மது குடித்ததால் மது போதை தலைக்கு ஏறியது. அப்போது லட்சுமி சவுதன்யாவுக்கும், சாந்த குமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சாந்தகுமாரியின் கையை பிளேடால் கிழித்தனர். பின்னர் சாந்தகுமாரியின் முகத்தில் செருப்பால் தாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அறையில் உள்ள மின்விசிறியில் சாந்த குமாரி தூக்கில் தொங்கினார். அவரது நண்பர்கள் சாந்த குமாரியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சாந்தகுமாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது சாந்தகுமாரியின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு போன் செய்து வலிப்பு நோய் ஏற்பட்டதால் சாந்தகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.
மகள் இறந்து விட்டதை அறிந்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் தனது மகளை மது போதையில் அடித்துக் கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடுவதாக குற்றம் சாட்டினர்.
இதேபோல் சாந்த குமாரியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் போலீசார் சாந்தகுமாரின் நண்பர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.