

தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா பஸ் நிலையத்தில் ஓட்டல் ஒன்று உள்ளது. வாலிபர் ஒருவர் டிபன் சாப்பிடுவதற்காக வந்தார். அவரிடம் பணம் இல்லை. இதனால் சாப்பிட்ட பிறகு சினிமா பாணியில் தப்பி செல்ல முடிவு செய்தார். ஓட்டலில் சாய்ந்தபடி இருந்த அவர் இட்லி, வடையை ஆர்டர் செய்து வயிறு முட்ட சாப்பிட்டார்.
பின்னர் திட்டமிட்டபடி நாடகமாட முடிவு செய்தார். ஒரு தோசை வேண்டும் என கேட்டார். அவருக்கு தோசை வழங்கப்பட்டது. தோசையை பிய்த்துபோட்ட அவர் தனது தலைமுடியை பிடுங்கி அதில் போட்டார். திடீரென கத்தி கூச்சிலிட்டு ரகளையில் ஈடுபட்டார். ஓட்டல் மேலாளர் வந்து ஏன் ரகளை செய்கிறீர்கள் என கேட்டார். அப்போது வாலிபர் நான் சாப்பிட்ட தோசையில் தலைமுடி உள்ளது. ஓட்டல் சுத்தமாக இல்லை என கூறி ரகளை செய்தார். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் வாலிபர் சாப்பிட்ட தோசையை பார்த்த போது அதில் முடி இருந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு அதிகாரிகள் ஓட்டல் மேலாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது ஓட்டல் மேலாளர் நாங்கள் ஓட்டலை தூய்மையாக தான் பராமரித்து வருகிறோம். தவறு எங்கே நடந்தது என்று தெரியவில்லை என கூறி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் கில்லாடி வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அப்போது உண்மையான கதை வெளிச்சத்திற்கு வந்தது. தோசை சாப்பிட்டுக் கொண்டு இருந்த வாலிபர் தனது தலை முடியை பிடுங்கி தோசையில் போடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ரகளை செய்த வாலிபரை தேடிய போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.