

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர் மாவட்டத்தில், கணவரை கொன்றதற்காக 32 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவரது காதலருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை நடந்தபோது அறையில் இருந்த, உயிரிழந்த சிவராஜ் சிங்கின் 14 வயது மகளின் வாக்குமூலம், அவரது மனைவி கிரண் கன்வார் மற்றும் அவரது காதலர் சுரேந்திர சிங் (எ) சுந்தர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் முக்கிய பங்காற்றியது.
கொலை வழக்கு:
சங்க்ரியா கிராமத்தை சேர்ந்த சிங், கடந்த செப்டம்பர் 17, 2024 அன்று காலை சுனெல் பகுதியில் உள்ள தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, உயிரிழந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர் என்று பவானிமண்டி கூடுதல் மாவட்ட நீதிபதி (ADJ) நீதிமன்றத்தின் உதவி அரசு வழக்கறிஞர் (APP) ஹேம்ராஜ் சர்மா தெரிவித்தார்.
விசாரணையின் போது, கன்வார் மற்றும் சுரேந்திரா ஆகியோருக்கு இடையே தொடர்பு இருந்ததும், செப்டம்பர் 16-17 இடைப்பட்ட இரவில் சிங் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர்கள் அவரது தலையில் சுத்தியலால் தாக்கியும், ஹீட்டர் வயர் மூலம் மின்சாரம் பாய்ச்சியும் அவரைக் கொன்றதும் தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.
வழக்குப் பதிவு:
விசாரணையின் அடிப்படையில், பிஎன்எஸ் (BNS) சட்டத்தின் பிரிவு 103(1), 238(A) மற்றும் 3(5)-ன் கீழ் கொலை குற்றத்திற்காக கன்வார் மற்றும் சுரேந்திரா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்; அவர்கள் அப்போதிருந்து சிறையில் உள்ளனர்.
பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் கிரண் கன்வார் (32) மற்றும் சுரேந்திர சிங் (எ) சுந்தர் (30) ஆகியோர் குற்றவாளிகள் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜீவ் தத்தாத்ரேயா இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தார். இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ. 30,000 அபராதமும் விதித்ததாக சர்மா தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின் போது, 23 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன; மேலும் 65 ஆவணங்கள் மற்றும் எட்டு பொருட்கள் நீதிமன்றத்தில் சான்றுகளாக சமர்ப்பிக்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.