பாபா வாங்காவின் 2024 கணிப்புகள் - உலகம் எப்போது அழியும்?

உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் பாபா வாங்கா கணித்தது போலவே நடந்துள்ளது. ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.
பாபா வாங்காவின் 2024 கணிப்புகள் - உலகம் எப்போது அழியும்?
Published on

புதுடெல்லி:

பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவர் 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் இறந்து விட்டார். இவருக்கு 12 வயது இருக்கும்போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல், வெள்ளத்தில் பாபாவாங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறி போனது.

அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டதோடு, எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளது. அதை கணிப்புகளாக எழுதிய பாபா வாங்கா இந்த சக்தி தனக்கு கடவுள் கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 5079-ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்து விட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் இவர் கணித்தது போலவே நடந்துள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்பட பல்வேறு சம்பவங்களை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாம் என பாபா வாங்கா கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவீதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலைகளின் அதிகபட்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2024-ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அறிவியல் ஆய்வுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் பாபா வாங்காவின் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1996-ம் ஆண்டு அவர் இறக்கும்போது இணைய சேவை ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால் 2024-ம் ஆண்டு சைபர் தாக்குதல்கள் பெருமளவு நடைபெறும் என்பதை அவர் கணித்திருந்தார். இதுவும் அவரது குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஆப்பிள், நெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் பிரச்சனைகளை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உலக பொருளாதார சக்தியின் மாற்றங்கள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் பிரச்சனைகள் ஆகியவற்றையும் பாபா வாங்கா முன்னரே கணித்து கூறியுள்ளார்.

இந்த ஆண்டு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பண வீக்கத்துடன் போராடி வருகின்றனர். மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சீனாவும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இவை யாவும் பாபா வாங்காவின் கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அதோடு முக்கிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் என்றும், 2024-ம் ஆண்டு தொடர்பாக பாபா வாங்கா கணித்துள்ளார். அவரது கணிப்பின்படி 5079-ம் ஆண்டில் உலகம் அழியும் என்று கூறப்படுவதால் அவரது கணிப்புகள் 5079-ல் நின்று விடும் என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com