என் மலர்
இந்தியா

VIDEO: தாயின் கண்ணில் மிளகாய்பொடி தூவி, சிறுவனை கடத்திய ஆசாமிகள்.. ஸ்கூல் செல்லும் வழியில் பயங்கரம்
- சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நேற்று [வியாழக்கிழமை] காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்ட சிறுவன் 7 வயதான ஷிவாய் குப்தா. சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். குவாலியரில் முரான் பகுதியில் நேற்று சிறுவனை தாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாயின் கண்களில் அவர்கள் மிளகாய்ப் பொடியை வீசியதால் அவர் நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.
அவர் தனது கணவரிடம் விரைந்து சென்று நடந்த முழு சம்பவத்தையும் கூறினார். தொடர்ந்து இருவரும் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையில் நேற்று மாலை கடத்தப்பட்ட 7 மணி நேரம் கழித்து சிறுவன் மீட்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார். சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மோகன் யாதவ் கூறினார்.






