என் மலர்
இந்தியா

ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டு குடும்பத்தை நிலைகுலைய செய்த இளம்பெண்
- அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட ஆர்வம் கொண்டவர்கள் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் விபரீதத்தில் முடிகிறது.
லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் வீடியோவை எடுக்க முயன்று உயிரிழக்கும் சம்பவங்களும் தினசரி நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானாலும் விழிப்புணர்வு என்பது இல்லாததே வேதனையாக உள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு 27 வயதான பெண் செய்த செயலால் இன்றைக்கு அப்பெண்ணின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த மோகினி என்பவர் இணையதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று வித்தியாசமான ரீல்ஸை எடுக்க முடிவு செய்த அவர், அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார். அப்போது கால் தடுமாறி கழுத்தில் கட்டிக்கொண்ட கயிறு இறுக்கியதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.
சில மணிநேரம் கழித்து மோகினியின் 4 வயதான மகள் அறைக்குள் நுழைந்த போது தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போடவே இச்சம்பவம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரீல்ஸ் எடுக்க ஆசைக்கப்பட்ட மோகினி செய்த செயலால் இன்று அவரின் 4 வயது மகள் தாயை இழந்து தவிக்கிறாள்.






