

உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு சூழல் காரணமாக பாதகமான நிலைகளை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற நாட்டு மக்களை பரிந்துரைத்துரைத்தார். அந்த வரிசையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் வாகன அணிவகுப்புகளை 50% குறைக்குமாறு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (செவ்வாய் கிழமை) லக்னோவில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் பொருட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு உள்ளூர் மக்களுக்கு முதலமைச்சர் ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், முதலமைச்சர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, தேவையற்ற தங்க கொள்முதலை தவிர்ப்பதன் மூலம் பிரதமரின் சிக்கன நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை வகுக்க, முதலமைச்சர் முதன்மை செயலாளர்கள் மற்றும் பிற தலைமை செயலாளர்களைச் சந்தித்தார்.
இத்துடன் 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' கலாச்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், சிக்கன நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில், எரிபொருளை சேமிக்கவும் அரசாங்க செலவினங்களை குறைக்கவும் உத்தர பிரதேச அதிகாரிகள், அரசு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களின் பயன்பாட்டை தாங்களாகவே முன்வந்து குறைக்க தொடங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.