முன்பதிவு செய்தும் இருக்கை கிடைக்காததால் ரெயிலின் கதவு கண்ணாடியை உடைத்த பயணி

ரெயில் கதவை திறக்க சொன்ன போதும் அங்கிருந்த பயணிகள் இடமில்லை என கூறியுள்ளனர்.வீடியோ வைரலான நிலையில் ரெயில்வே சேவா பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்பதிவு செய்தும் இருக்கை கிடைக்காததால் ரெயிலின் கதவு கண்ணாடியை உடைத்த பயணி
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் தொலை தூர ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காணமுடியும்.

முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட சில நேரங்களில் டிக்கெட் எடுக்காத பயணிகள் அதிக அளவில் ஏறிவிடுவதையும், இதனால் அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏற முடியாமல் தவித்தது தொடர்பாகவும் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவின் அசம்கர் நகருக்கு செல்லும் கைபியாத் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்த ஒரு பயணி ரெயில் கதவு கண்ணாடியை உடைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் கர் கே காலேஷ் என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோ 32 விநாடிகள் ஓடுகிறது. அதில் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர் அந்த பெட்டியில் ஏற செல்கிறார். ஆனால் டிக்கெட் இல்லாத பயணிகள் ஏற்கனவே அந்த பெட்டிக்குள் அதிகமாக இருந்ததால் அவரால் ரெயிலுக்குள் ஏற முடியவில்லை. அவர் ரெயில் கதவை திறக்க சொன்ன போதும் அங்கிருந்த பயணிகள் இடமில்லை என கூறியுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த பயணி ரெயில் கதவின் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரெயில்வே சேவா பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் காசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இதேபோன்று ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர் தான் பயணம் செய்த பெட்டியில் டிக்கெட் எடுக்காத பயணிகள் அதிகம் பேர் பயணம் செய்ததால் அவர் தரையில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com