

வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில், சந்திரகீர் கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் ஜீலம் ஆற்றின் கரை ஓரம் நின்று துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் எதிர்பாராத விதமாக வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 2 நண்பர்களும் ஆற்று வெள்ளத்தின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, 3 பேரின் உடல்களையும் பிணமாக மீட்டனர்.
அவர்கள் சமீர் அகமது தார் (22), சொஹைல் அகமது தார் (22), ஆதில் அகமது தார் (18) என அடையாளம் காணப்பட்டனர். இந்த மூவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.