search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் சபரிமலை புறப்பட்டது: வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம்
    X

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் சபரிமலை புறப்பட்டது: வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

    • சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல், மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை தொடங்கிய சில நாட்கள் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சன்னிதானம், பம்பை, பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் மலை பாதைகள், மரக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் அதற்கான சில நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை அமல்படுத்தியதன் மூலம் சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஊர்வலம் வந்த இடங்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கு சென்று, இறுதியில் சபரிமலைக்கு வந்து சேருகிறது.

    நாளை மறுநாள் (26-ந்தேதி) தங்க அங்கி ஊர்வலம் பம்பைக்கு வந்து சேரும். அங்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்பு அங்கிருந்து நீலிமலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கி எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

    26-ந்தேதி மாலையில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) வரை ஐயப்ப சுவாமி தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகளவில் இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

    மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

    மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய 40 ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிந்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கோவில் நடைசாத்தப்படுகிறது.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×