

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் வந்தனா தாஸ் (வயது 23). கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி இவர் பணியில் இருந்த போது, சிகிச்சைக்கு வந்த வேலியம் செருக்காரக்கோணத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான சந்தீப் (44) என்பவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டார். ஆஸ்பத்திரியில் இருந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்த அவர், டாக்டர் வந்தனா தாசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சந்தீப் குற்றவாளி என கடந்த 17-ந்தேதி நீதிபதி வினோத் தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சந்தீப்புக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதி வினோத் அறிவித்தார். கொலைக்கு ஆயுள் தண்டனை, பிரிவு 307-ன் கீழ் 10 ஆண்டுகள் மற்றும் கொலை முயற்சிக்கு பிரிவு 326-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மருத்துவமனை தாக்குதலுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 324, 332 மற்றும் 333 ஆகிய பிரிவுகளின் கீழ் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னரே, ஆயுள் தண்டனை தொடங்கும் என்று அரசுத் தரப்பு வக்கீல் கூறினார்.
மேலும் இது ஒரு அரிதான குற்றம் எனக் கண்டறியப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அதிகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.