search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி 2-வது முறையாக அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜர்
    X

    நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி 2-வது முறையாக அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜர்

    • சிறிது நேரத்தில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்ற நிலையில் பிரியங்கா காந்தி அங்கேயே காத்து இருந்தார்.
    • ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

    அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறினார். இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.

    பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.

    ராகுல்காந்தி கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் மொத்தம் 53 மணி நேரம் விசாரணை நடந்தது.

    சோனியாகாந்தி கடந்த மாதம் 8-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய போது அவர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டதால் அவகாசம் அளிக்க வேண் டும் என்று கோரி இருந்தார். இதை ஏற்று கொண்ட அமலாக்கத்துறை கடந்த 26-ந்தேதி ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு புதிய சம்மனை அனுப்பியது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சோனியாகாந்தி கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டு 28 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார்.

    சோனியாகாந்தி 25-ந்தேதி (நேற்று) மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. பின்னர் ஆஜராகுவது ஒரு நாள் (26-ந்தேதி) தள்ளி வைக்கப்பட்டது.

    சோனியாகாந்தி இன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்படி இன்று சோனியா காந்தி 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவர் காலை 11 மணிக்கு காரில் வந்தார். அவருடன் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் சோனியாகாந்தி மட்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். சிறிது நேரத்தில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்ற நிலையில் பிரியங்கா காந்தி அங்கேயே காத்து இருந்தார்.

    சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பங்குகள் மாற்றம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

    சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி அமலாக்கதுறை முன்பு முதல் நாளில் ஆஜரானதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதே போல் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானதையடுத்து அவரது இல்லம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    Next Story
    ×