ஜி 20 மந்திரிகள் மாநாடு: பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் சிவில் விமான பயணத்தில் பெண் விமானிகள் அதிக சதவீதத்தில் உள்ளனர்.பெண் அதிகாரிகள் செயல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
ஜி 20 மந்திரிகள் மாநாடு: பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி:

ஜி 20 அமைப்பின் கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெண்கள் அதிகாரம் குறித்த ஜி 20 அமைச்சர்கள் மாநாடு குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்தரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களின் பொருளாதார வலுவூட்டல் வளர்ச்சியை தூண்டுகிறது. அவர்களின் கல்விக்கான அணுகல் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்துதலாக உள்ளது. பெண்களின் தலைமையானது உள்ளடக்கத்தை வளர்க்கிறது. அவர்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் பேறுகாலப் பணியாளர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் ஆவார்கள்.

பெண்களை மேம்படுத்துவதற்கான மிகச்சிறந்த வழி பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகு முறையாகும். இந்த நிலையில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்கள் செழிக்கும்போது உலகம் செழிக்கும்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் பழங்குடி பின்னணியில் இருந்து வந்தவர். தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழி நடத்துகிறார். உலகின் 2-வது பெரிய பாதுகாப்பு படையின் தளபதியாக பணியாற்றுகிறார்.

இன்று ஆண்களை விட பெண்களே உயர் கல்வியில் அதிகமாக சேருகின்றனர். இந்தியாவில் சிவில் விமான பயணத்தில் பெண் விமானிகள் அதிக சதவீதத்தில் உள்ளனர். மேலும் இந்திய விமானப்படையில் பெண் விமானிகள், போர் விமானங்களை இயக்குகிறார்கள். பெண் அதிகாரிகள் செயல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு மோடி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com