திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் மீது சரமாரி தாக்குதல்

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர். சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் மீது சரமாரி தாக்குதல்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அரசு டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டத்திற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்த நாளில் கேரளாவில் மீண்டும் டாக்டர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அதன்விபரம் வருமாறு:-

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர். அங்கு சுதீர் என்ற வாலிபர் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறிய சுதீர் திடீரென அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி டாக்டர்கள் இருவரும் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில், டாக்டர்களை தாக்கிய சுதீரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com