search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவனின் காயத்திற்கு மருந்துக்கு பதிலாக பசை தடவிய டாக்டர்- ஆஸ்பத்திரிக்கு சீல்
    X

    கோப்பு படம்

    சிறுவனின் காயத்திற்கு மருந்துக்கு பதிலாக பசை தடவிய டாக்டர்- ஆஸ்பத்திரிக்கு சீல்

    • முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த சிறுவனின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    ஐதராபாத்:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவரது மகன் பிரவீன் சவுத்ரி (வயது 7).

    தெலுங்கானா மாநிலம் கதவ்வால் மாவட்டத்தில் உள்ள அய்சா பகுதியில் இவர்களது உறவினர் திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க வம்சி கிருஷ்ணா அவரது மகனை அழைத்து வந்திருந்தார்.

    அங்கு சென்ற பிறகு சிறுவன் தனது வயதுக்கேற்ற குறும்புத்தனத்துடன் ஓடி ஆடி விளையாடினான்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்தான். இதில் இடது கண் ஓரமாக அடிபட்டது. வலியால் துடித்து சிறுவன் அலறினான்.

    இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர்கள், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் பெவி குவிக்கை தடவி விட்டுள்ளார்.

    இதனால் பதறிப்போன பெற்றோர்கள் டாக்டரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்தது.

    முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    Next Story
    ×