search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியானது டிஜிட்டல் ரூபாய்
    X

    நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியானது டிஜிட்டல் ரூபாய்

    • பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.
    • ரூ.1, ரூ.2, ரூ5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது.

    மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது.

    நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி சில்லரை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் இன்று வெளியானது. முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.

    டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவமைப்பை கொண்டது. முதலாவது டோக்கன் அடிப்படையிலும் 2-வது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.

    டோக்கன் முறையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. இந்த டோக்கனை வைத்து இருப்பவர்கள் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்கள். கணக்கு முறையிலான அமைப்பில் டிஜிட்டல் ரூபாய் வைத்து இருப்பவர்கள் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்து இருக்க வேண்டும்.

    குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது இதனை பயன்படுத்த முடியும். மொபைல் செயலி மூலம் 'இ வால்ட்' உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்.

    ரூ.1, ரூ.2, ரூ5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்களது உறவினர்கள் மற்றும் மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். அரசின் பங்கு பத்திரங்களுக்கும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பரீட்சார்த்த முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ரூபாய் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் சில்லரை வர்த்தக பண பரிமாற்றத்தில் புதிய புரட்சி ஏற்படும்.

    ஏற்கனவே பெட்டிகடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கு மாறிவிட்டதால் இன்று வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி பரிமாற்றத்திற்காக மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் ரூபாயாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிஜிட்டல் ரூபாய் மூலம் வருங்காலத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது போன்ற செலவினங்கள் குறையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, டிஜிட்டல் ரூபாய் என்பது பிட் காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். ஏன் என்றால் இது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    எனவே இதற்கு எப்போதும் மதிப்பு இருக்கும். ஒரு டிஜிட்டல் ரூபாய் என்பது ஒரு ரூபாய்க்கு இணையான மதிப்பையே கொண்டு இருக்கும் என்றனர்.

    4 நகரங்களை தொடர்ந்து விரைவில் அகமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், காங்டாக், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா ஆகிய 9 நகரங்களில் இந்த முறை விரிவுப்படுத்தப்படும் என ரிசர்வ வங்கி தெரிவித்து உள்ளது.

    ஒரு மாதத்திற்குள் இந்த டிஜிட்டல் ரூபாய் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    Next Story
    ×