பாசமாக வளர்த்த நாய் இறந்ததும் கல்லறை கட்டிய ஆந்திர வாலிபர்

4 ஆண்டுகளாக பாசத்துடன் வளர்த்த நாய் இறந்ததும் அதன் நினைவாக ஆந்திராவை சேர்ந்த வாலிபர் குண்டூரில் நினைவிடம் ஒன்றை கட்டியுள்ளார்.
இறந்த நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை
இறந்த நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை
Published on

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சீனிவாஸ். ஐதராபாத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 2014-ம் ஆண்டு நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்தார்.

அந்த நாய்க்குட்டிக்கு அவர் தும்பு என்று பெயரிட்டு இருந்தார். கடந்த மாதம் 14-ந்தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக அந்த நாய் இறந்தது.

4 ஆண்டுகளாக பாசத்துடன் வளர்த்த நாய் பிரிந்ததால் சீனிவாஸ் மிகுந்த வேதனை அடைந்தார். அந்த நாய் உடலை அவர் தனது சொந்த ஊரான குண்டூருக் எடுத்து சென்று அடக்கம் செய்தார். பிறகு அந்த இடத்திலேயே நினைவிடம் ஒன்றை கட்டினார்.

அதில், தும்பு நாயின் உருவப்படம் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தும்பு போன்று மற்றொரு நாயை தேர்வு செய்து வளர்க்க சீனிவாஸ் முடிவு செய்தார். இதற்காக அவர் தெலுங்கானா மாநில பிராணிகள் தத்தெடுப்பு சங்கத்தை நாடினார்.

பிராணிகள் தத்தெடுப்பு சங்கத்தின் உதவியுடன் அவருக்கு வேறொரு நாய் கிடைத்தது. அந்த நாய்க் குட்டிக்கு அவர் ‘தும்பு ஜூனியர்’ என்று பெயரிட்டுள்ளார்.

தும்பு ஜூனியர் நாய் மிகுந்த பாசத்துடன் சீனிவாசுடன் பழகத் தொடங்கி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com