பாலக்காடு அருகே டீக்கடை நடத்திக்கொண்டே பஞ்சாயத்து தலைவர் பணியாற்றும் இளம்பெண்

பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லும் அனுஷா அங்கு மாலை வரை வேலை பார்ப்பார். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்றபின்பு நேராக டீக்கடைக்கு வந்துவிடுவார்.
அனுஷா
அனுஷா
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அனுஷா. (வயசு 30).

இவர் கடந்த 2020 டிசம்பர் மாதம் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நல்லேபள்ளி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டார்.

இதில் வெற்றி பெற்ற அனுஷா பின்னர் நல்லே பள்ளி பஞ்சாயத்து தலைவராகவும் ஆனார். கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் முன்பு அனுஷாவின் கணவர் நிஷாந்த் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

மேலும் அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்தார்.இதனால் கணவர் வேலைக்கு சென்றதும் டீக்கடையை அனுஷா பார்த்துக்கொள்வார்.

தேர்தலில் வெற்றி பெற்று அனுஷா பஞ்சாயத்து தலைவர் ஆனபின்பும் அவர் டீக்கடை வேலையை நிறுத்தவில்லை.

தினமும் காலையில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லும் அனுஷா அங்கு மாலை வரை வேலை பார்ப்பார். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்றபின்பு நேராக டீக்கடைக்கு வந்துவிடுவார்.

மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை டீக் கடையில் வேலை பார்ப்பார்.

இந்த நேரத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கோரிக்கைகளுடன் வரும் பொது மக்களின் குறைகளையும் கேட்டறிவார். கடந்த ஓராண்டாக இவரது பணி சிறப்பாக இருப்பதாக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அனுஷாவிற்கு ஒரு மகளும் உள்ளார். குடும்பமாக இருந்தாலும் அரசியலை வேலையாக பார்க்காமல் பொதுமக்களுக்கு செய்யும் சேவையாக கருதுவதாக அனுஷா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com