முன்னணி கிரிப்டோகரன்சி தளத்தை முடக்கி ரூ.379 கோடி திருடிய ஹேக்கர் கைது

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின் டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். காயின் டிசிஎக்ஸ் தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது.
முன்னணி கிரிப்டோகரன்சி தளத்தை முடக்கி ரூ.379 கோடி திருடிய ஹேக்கர் கைது
Published on

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பண பரிவர்த்தனை தளமாக காயின் டி.சி.எக்ஸ் உள்ளது. இதில் கோடிக்கணக்கானவர்கள் கணக்கு தொடங்கி டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் காயின் டி.சி.எக்ஸ் தளம் கடந்த 19-ந்தேதி இரவு திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் இந்த தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது. இதில் முதலீட்டாளர்கள் கணக்கில் இருந்து எந்த பணமும் திருட்டு போகவில்லை எனவும், கருவூல கணக்கில் இருந்தே இழப்பு ஏற்பட்டுள்ளதாக காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா தெரிவித்தார்.

ஹேக் செய்யப்பட்ட பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டது. மேலும் பெங்களூரு ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஆபரேஷன் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ததில் காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வரும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த கார்மெலராம் பகுதியை சேர்ந்த ராகுல் அகர்வால் (வயது 30) என்பவர் உள்நுழைவு சான்றுகளை திருடி, கணினி மூலம் பணத்தை திருடியது தெரியவந்தது.

இது குறித்து பெங்களூரு நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் அகர்வாலை கைது செய்தனர். கிரிப்டோ வர்த்தக தளமான காயின் டி.சி.எக்ஸ் நடத்தும் நெப்லியோ டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து துணைத் தலைவர் ஹர்தீப் சிங் கூறுகையில், "ராகுல் நிறுவனத்தின் நிரந்தரப் பணியில் இருந்தார். அலுவலக வேலைக்காக மட்டுமே அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி அதிகாலை 2.37 மணிக்கு அந்த கணினியை பயன்படுத்தி ராகுல் அகர்வால் கணினியை ஹேக் செய்து பணத்தை திருடினார். பின்னர் காலை 9.40 மணியளவில், ரூ.379 கோடி திருடி 6 கணக்குகளுக்கு மாற்றினார். இதன் மூலம் நாங்கள் அவரை கண்டுபிடித்தோம்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com