என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
உளவுத்துறை தகவல் அடிப்படையில் அடுத்த சில நாட்கள் பயணம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






