சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கை 5 மாதங்களில் முடிக்க உத்தரவு

சாத்தான்குளம் தந்தை -மகன் இறப்பு குறித்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன்
சாத்தான்குளம் தந்தை, மகன்
Published on

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கிஸ் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது காவல் நிலையத்தில் உயிரிழந்தனர். 

இருவரும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் வாக்குமூலம் அளித்தார்.  அப்போது, ஜெயராஜ்  மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக அவர் கூறினார்.

இருவரும் உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை -மகன் மீது பொய்வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்ததாக  சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com