search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மூலவர் குழந்தை ராமர் சிலை அயோத்தியில் 17-ந்தேதி நகர்வலம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மூலவர் குழந்தை ராமர் சிலை அயோத்தியில் 17-ந்தேதி நகர்வலம்

    • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
    • சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி:

    பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ந்தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். அங்கு நடக்கும் தேர் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றில் இந்த சிலை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியாநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டன. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும்.

    இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர். இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வடித்த சிலைதான் அயோத்தி ராமர் கோவிலில் இடம்பெறப் போவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அயோத்தி முழுக்க ஆங்காங்கே அன்னதானம் நடந்து வருகிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் (17-ந்தேதி) அந்த ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கோவிலில் மூலவர் சிலையாக பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரத்தையும் அறிவித்துள்ளார். கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் அட்ஷதை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சம்பத்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் கருவறையில் பால ராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ந்தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

    அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×