ராஜஸ்தானில் பயங்கரம்: டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி தீ விபத்து-7 பேர் உடல் கருகி பலி

இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 Rajasthan accident
Published on

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், இன்று அதிகாலையில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்குச் சென்று கொண்டிருந்த 'ஹான்ஸ் டிராவல்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசு படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்து, தௌசா மாவட்டத்தின் கொல்வா காவல் எல்லைக்குட்பட்ட தனவ்தா என்ற பகுதிக்கு அருகே அதிகாலை 3:15 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிய சில நிமிடங்களிலேயே பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாகத் தீப்பிடித்து, அது ஒட்டுமொத்த வாகனத்திற்கும் அதிவேகமாகப் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பேருந்து மோதிய பலத்த வேகத்தில், மேல் படுக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனால், அவர்களால் உடனடியாகப் பேருந்தை விட்டு வெளியேற முடியாமல் போனது.

இந்த தீ விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என கூறப்படுகிறது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தௌசா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் மற்றும் மாவட்ட ஆட்சியர் சவுமியா ஜா ஆகியோர் தலைமையில் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சுமார் 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக தௌசா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து கொல்வா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மோதிய வேகத்தில் எரிபொருள் தொட்டி வெடித்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து காரணமாக டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com