

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் வருத்தமளிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகலில் நடந்த இந்த கோர சம்பவம் 13 உயிர்களை பறித்தது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக உயிர்கள் பலியானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துணை நிற்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, "கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர்கள் பலியான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய் பிரார்த்திக்கிறேன்," என குறிப்பிட்டிருந்தார்.