

மகாராஷ்டிராவின் பாகல் மாவட்டத்தில் அபிஜித் மெண்டல் என்பவர் தனியார் கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி கூடத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 17 வயது மைனர் பெண் ஒருவர் சேர்ந்தார்.
அப்போது பயிற்சியாளர் அந்தப் பெண்ணின் சில வீடியோக்களை எடுத்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்தி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மணிக்பூர் காவல் நிலையத்தில் பயிற்சியாளர் மெண்டல் மீது புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், “கால்பந்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற வாக்குறுதி அளித்து என்னை மயக்கி, எனது நம்பிக்கையைப் பெற்று ஏமாற்றிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் என்னை பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.
அவருடன் உள்ள தொடர்பைத் தவிர்க்க முயன்றபோது, அவரிடம் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டத் தொடங்கினார்.
அவரின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார்” என்று பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், வசாய் மாவட்டம் மணிக்பூர் காவல்துறையினர், முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் மெண்டலைக் கைது செய்தனர்.
பின்னர் பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.